வட தமிழ்நாட்டின் ராவுத்தநல்லூர் கண்டிகை தொடங்கி நடு தமிழ்நாட்டின் திண்டுக்கல் பஞ்சம்பட்டி வரையில் உள்ள நிலப்பரப்பை எடுத்துக்கொண்டு, அதில் கிறிஸ்தவத்தில் ஜாதியம் வேரூன்றி வளர்ந்து நிற்கும் நிலையை கள ஆய்வுகள், நேர்காணல்கள் வாயிலாக இந்த நூல் கவனப்படுத்துகிறது.
1990களின் தலித் எழுச்சி வரலாற்றை ஆவணப்படுத்துவதோடு, அன்றைய தலித் களப் போராளிகளின் நேர்காணல்கள் மூலம் இன்றும் களத்தில் செய்யவேண்டுவன என்னென்ன, அவற்றை எப்படி முன்நகர்த்திச் செல்லலாம் என்பது பற்றியும் இந்த நூல் உரையாடுகிறது. ஜாதியம் என்பது தலித் கிறிஸ்தவர்களின் பிரச்னை என்று ஒதுங்கிச் செல்லாமல், ஒட்டுமொத்த சமூகமும் வஞ்சிக்கப்படும் அவர்களின் பக்கம் நின்று நியாயம் கிடைக்கப் போராட வேண்டும் என்பதையே இந்த நூல் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.
நிவேதிதா லூயிஸ்
வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக இயங்கிவருபவர். முன்னாள் மத்திய அரசுப் பணியாளர். உள்ளூர், மறைக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தின் வரலாற்றை முனைப்போடு மக்களிடம் கொண்டுசெல்பவர். ‘முதல் பெண்கள்’, ‘ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை’, ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’, ‘சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை’, ‘மகிழ்ச்சியின் தேசம்’, ‘அறியப்படாத கிறிஸ்தவம்’, ‘அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது’, ‘கலகப் புத்தகம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘வடசென்னை வரலாறும் வாழ்வியலும்’ நூல், 2022-ம் ஆண்டின் எஸ்.ஆர்.எம். தமிழ்ப் பேராயத்தின் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதும், தமுஎகச-வின் சிறந்த தொன்மைசார் நூலுக்கான தோழர் கே.முத்தையா விருதும் வென்றுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு லாட்லி ஊடக விருது வென்றுள்ளார். இவர் Her Stories அமைப்பின் இணை நிறுவனர்.