மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தில் குழந்தைகளை ஏற்றி எறும்புகளின் உலகிற்கு அழைத்துச் செல்கிறார், வண்ணங்கள் கலந்து வேறு வண்ணங்கள் உருவாகும் ரசவாதத்தை விளக்குகிறார். செடிகள் தங்கள் உணவை தாமே தயாரிப்பதை வேரின் அடி வரை பயணிக்கச் செய்து விளக்குகிறார். நீரின் மூன்று நிலைகள், சூரியக் கடிகாரம், உடலின் உறுப்புகள், சூரியக் குடும்பக் கோள்கள், ஒளியின் பயணம், நெம்புகோல், உருளைகளின் பயன்பாடு என அனைத்தையும் பற்றி மந்திரக் கம்பளப் பயணம் வாயிலாக விளக்குகிறார். அறிவியல் ரீதியான உண்மைகளை, அனுபவங்களாக உணரும்போது அவை ஆழ்மனத்தில் என்றும் பதியும் என்பதற்கு இந்நூல் நல்லதோர் உதாரணம்!
மா
மா, மானசி, கண்ணம்மா, நந்தினி, ஊசா என்று பல பெயர்களில் கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருபவர் ஏ.எஸ்.பத்மாவதி. வீடியோ, நாடகம், சிறுகதை, கட்டுரை என்று வெவ்வேறு வடிவங்களிலும் குழந்தைகள் மற்றும் பெண்களின் வாழ்க்கை பற்றி பதிவு செய்து வருகிறார். தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கும், யூனிசெப், IIHS Freedom Fund போன்ற பன்னாட்டு அமைப்புகளுக்கும் வாழ்க்கைத் திறன் கல்வி, பாலின சமத்துவம் குறித்த ஆலோசகராக இருக்கிறார்.