ஆண், பெண்ணின் மேல் ஆதிக்கம் செலுத்துவது தவறே இல்லை என்பதற்கு சாட்சியாக இன்றைக்கும் பல தொலைக்காட்சி சீரியல்கள், திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த ஆணாதிக்கக் கருத்தாக்கம் திரும்பத் திரும்ப எல்லோர் மனத்திலும் காட்சிகளாக, பாத்திரங்களாக அழுத்தமாக பதியவைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு பெண், சக பெண்களின் பாலியல் வேட்கைக்கு நியாயம் வேண்டிக் குரல் கொடுத்தால் என்னவாகும்? அந்தப் புரட்சிக்குரல்தான் இந்தப் புத்தகம். தாம்பத்ய உறவில் திருப்தி என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது. அதை திருமணமான ஒரு பெண் எப்படிக் கண்டடைவது என்பதை அறிவியல், மருத்துவம், உளவியல் ரீதியாக இந்த நூலிலுள்ள கட்டுரைகள் முன்வைக்கின்றன. மனைவி என்கிற மனுஷியின் உணர்வுகளுக்குக் கணவன் மதிப்பளிக்காதது என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் வழிவகுக்கும் என்பதை இந்த நூலிலுள்ள அத்தியாங்கள் விரிவாகப் பேசுகின்றன. திருமணமான ஒவ்வோர் ஆணும் பெண்ணும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் இது!
செலின் ராய்
காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும், அழகியலில் அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர். விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC - NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கி தமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியும், புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் எழுதியும் வந்தவர், பெண்களுக்கான பிரபல பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது ‘The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிகை செய்தி வெளியிட்டது. 53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார். இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது.